Headlines
Loading...
டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச்சாறு மருந்தாகுமா?

டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச்சாறு மருந்தாகுமா?



Dr.MSM. நுஸைர்,
காத்தான்குடி - 

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது டெங்கு நோயாகும். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் அரசும் தனியாரும் மும்முரமாக ஈடுபட்டு வரும் இவ்வேளையில் வைத்தியசாலைகள் எங்கும் நோயாளிகள் நிறைந்து காணப்படுகின்றனர். முன்னொரு போதும் இல்லாதவாறு தற்போது மக்கள் மத்தியில் ஓரளவு பரவலாக டெங்கு பற்றிய அறிவு காணப்படுகிறது.

இதில் பிரதானமானது இரத்தத்தில் உள்ள குருதிச்சிறுதட்டுக்கள் (platelets) குறைவடைவது தொடர்பான அறிவாகும்.
 இதனால் காய்ச்சல் ஏற்பட்ட 2ம் அல்லது 3 ம் நாளில் இரத்தத்தில் உள்ள பிளேட்லட்டின் அளவை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற விடயம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுவது மட்டுமன்றி 100000 ஐ விட பிளேட்லட் குறைவடைவது டெங்கு நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும் என்றும் எம்மில் பலர் அறிந்து  வைத்திருக்கிறோம். இதனால் ஒரு நோயாளி  காய்ச்சலால் பாதிக்கப்பட்டதும் அவரது ப்ளேட்லட் கெளன்ட் எவ்வளவு என்பதை அறிவதில் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இரத்தத்தின்  ப்ளேட்லட் அளவை வைத்தே மக்கள் நோயின் தீவிரத்தன்மையையும் தீர்மானிக்கின்றனர்.

அத்தோடு மட்டுமல்லாது ப்ளேட் லட் அளவை அதிகரிப்பதற்கு பப்பாசி இலைச்சாற்றை பயன்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர். இன்னும் சிலர் வைத்தியரின் ஆலோசனையின்றி பப்பாசி இலைச்சாற்றை நோயாளிக்குக் கொடுக்கின்றனர்.

இந்த இடத்தில் பப்பாசி இலைச்சாறு டெங்கு நோயின் பராமரிப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பேசுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

இங்கு தான் டெங்கு நோயின் பராமரிப்பு தொடர்பாக சற்று ஆழமாக நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

டெங்கு நோயானது ஈடீஸ் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு வகை வைரஸினால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வைரஸுக்கெதிரான மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் டெங்கு நோயை குணப்படுத்தவென்று விஷேட மருந்துகள் ஏதும் கிடையாது . ஆனால் டெங்கு நோயால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகள் அதிகமாக உள்ளன, இச் சிகிச்சை பராமரிப்பு முறைகளை முறையாக மேற்கொள்ளாதவிடத்து உயிரா பத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

டெங்கு வைரஸ் மூன்று வகையான நோய் நிலைகளை ஏற்படுத்தலாம்.

1. Dengue fever- டெங்குக் காய்ச்சல்
2. Dengue Haemorrhagic fever - டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல்
3. Dengne Shock Syndrome

1. டெங்குக் காய்ச்சல்:

இது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல் ஏற்படும்,
காய்ச்சல், தலைவலி, மூட்டு, தசை நோவு, வாந்தி போன்ற அறிகுறிகளோடு ஏற்படும். இதன் போது இரத்தத்தின் ப்ளேட் லட் அளவும் குறைவடையும். ஆனால் இதன் போது பெரிய ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. 
ப்ளேட்லட் என்பது எமது உடலில் சிறிய காயங்கள் ஏற்படும் போது இரத்தத்தை உறைவடையச் செய்து இரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக இரத்தத்தில் காணப்படும் சிறிய கலங்கலாகும். எனவே ப்ளேட்லட் குறைவடைந்தால் சிறிய காயங்கள் மூலமாக அதிக இரத்தம் வெளியேற வாய்ப்புண்டு. இதனால் தான் டெங்கு நோயின் போது ப்ளேட்லட் வெகுவாக குறைவடைந்தால் (20000) முரசில் இருந்தோ அல்லது மூக்கிலிருந்தோ இரத்தம் கசிய வாய்ப்புண்டு.


2. Dengue Haemorrhagic fever (டெங்கு குருதிப்பெருக்குக் காய்ச்சல்)

இது ஆபத்தான நோய் நிலையாகும். இதன் போது ப்ளேட்லட் குறைவடைவதோடு மட்டுமல்லாமல் உடலின் இரத்தக் குளாய்களினுள் உள்ள இரத்தத்தில் உள்ள நீர், இரத்தக் குளாய்களை விட்டு வெளியேறி வேறு உடற்பாகங்களில் தேங்குகிறது. இதனை leaking phase என்று சொல்லப்படும். சுவாசப்பையை சூழ இந்நீர் தேங்கினால் (pleural effusion) மூச்சுத் திணரல் ஏற்படும். வயிற்றுக் குழிக்குள் தேங்கினால் (Ascites) வயிறு வீக்கமடையும். இதயத்தை சூழ நீர் நிறைந்தால் (pericardial effusion) இதயத் துடிப்பு பாதிக்கப்படும். இரத்தத்தில் இருந்து நீர் வெளியேறுவதால் குருதி அமுக்கம் (Blood pressure) குறைவடைந்து முக்கியமான உறுப்புகளுக்கான இரத்தோட்டம் குறைவடைந்து அவை படிப்படியாக செயலிழக்க ஆரம்பிக்கும். உரிய சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து இது  டெங்கு சொக் சின்ட்ரோம் எனும் மிக மிக ஆபத்தான நிலைக்குச் சென்று உயிராபத்து ஏற்படும்.

மேலும் ஈரல், கிட்னி போன்றன செயலிழந்து விடும். டெங்கு வைரஸினால் மூளையிலும் நேரடி பாதிப்பு ஏற்பட்டு மூளைய அழர்ச்சி (Dengue encephalitis) ஏற்பட்டும் இறப்பு ஏற்படலாம்.
இவையெல்லாம் ப்ளேட் லட் குறைவடைவதால் ஏற்படும் பாதிப்புகள் அல்ல. Fluid leaking இனாலும் வைரஸின் நேரடித் தாக்கத்தாலும் ஏற்படும் பாதிப்புகளாகும். எனவே ப்ளேட் லட் அதிகரிப்பதனால் மட்டும் மேற்சொன்ன மிக ஆபத்தான பாதிப்புகளில் இருந்து தப்பிவிட முடியாது. எனவே எம்மில் அதிகமானோர் நினைப்பது போன்று ப்ளேட்லட்டின் அளவே டெங்கு நோயின் தீவிரத்தன்மையை தீர்மனிப்பதல்ல. அதை தாண்டி ஏராளமான விடயங்கள் உள்ளன.
டெங்கு குருதிப்பெருக்குக் காய்ச்சலில் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கு/ ஒரு மணித்தியாலத்திற்கொரு முறை நோயாளியை பரிசோதித்து சிறுநீர் கழிக்கப்படும் அளவை அளந்து மிக துல்லியமாக சிகிச்சையளிப்பதன் மூலம் Dengue Haemorrhagic fever இலிருந்து நோயாளியை காப்பாற்ற முடியும். இதனால் தான் டெங்குக் காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு அது டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சலாக மாறும் போது 48 மணி நேரத்திற்கு தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும்.

 வைத்தியர்களும் தாதிமாரும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களும் மிகக் கரிசனையோடு இரவு பகலாக இயங்குவதன் மூலம் (இறைவனின் உதவியோடு) இந்நோயாளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. சாதாரண டெங்கு காய்ச்சலின் போது ப்ளேட் லட் அளவு குறைவடைந்தாலும் இவ்வாறான பாரிய ஆபத்துகள் ஏற்படுவதில்லை )

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக ளுக்கு பப்பாசி இலைச் சாறு கொடுப்பதன் மூலம் டெங்கு நோயை குணப்படுத்தலாம் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகிறது . ஆனால் இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. பப்பாசி இலைச் சாற்றின் மூலம் ப்ளேட்லட் அளவு சிறிது அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கூறினாலும் டெங்கு நோயின் முழுமையான சிகிச்சையில் பப்பாசி இலைச் சாற்றின் பங்களிப்பு மிகவும் புறக்கணிக்கதாகவே உள்ளது. மட்டுமல்லாது இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்டது போன்று டெங்கு நோயின் இரண்டாம் நிலையான Dengue Haemorrhagic fever ல் ஏற்படும் பாதிப்புகள் ப்ளேட்லட் குறைவடைதனால் ஏற்படுபவை அல்ல. அத்தோடு பப்பாசி இலைச் சாற்றை குடிப்பதன் மூலம் டெங்கு நோயை குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை உரிய சிகிச்சை பெறுவதில் இருந்து மக்களை தூரமாக்கி டெங்கு நோயாளர்களை உயிராபத்தில் தள்ளிவிட வாய்ப்புண்டு. அதாவது டெங்கு நோயாளிக்கு சிலர் பப்பாசி இலைச் சாற்றை மட்டும் கொடுத்து விட்டு முறையான சிகிச்சையளிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது மிக ஆபத்தான நிலையா கும்.  அத்தோடு டெங்கு நோய் தொடர்பில் விஷேட பயிற்சி பெற்ற வைத்தியர்களோ சுகாதார அமைச்சோ டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச்சாற்றினால் சிகிச்சையளிப்பதற்கு அறிவுறுத்தவுமில்லை.

எனவே டெங்கு நோயாளர்களை உரிய முறையில் சிகிச்சையளித்து உயிராபத்துக்களில் இருந்து பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றினைவோம்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.