Headlines
Loading...
 விவாக சட்டம் முஸ்லிம் எம்.பிக்களின் அனுமதியுடனேயே சமர்ப்பிக்கப்படும்

விவாக சட்டம் முஸ்லிம் எம்.பிக்களின் அனுமதியுடனேயே சமர்ப்பிக்கப்படும்



முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை சபையில் வேண்டுகோள் விடுத்தார். 
வேண்டுகோளை ஏற்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள இரு குழுக்களினதும் அறிக்கைகள் கிடைத்த பின்னர் முஸ்லிம் எம்.பிக்களுடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார். 

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நீதி அமைச்சின் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் பின்வருமாறு கோரிக்கை விடுத்தார். 

இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. ஷரீஆ சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரும்நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவுக்கு நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் சார்பிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் யோசனைகள் முன்வைப்பட்டள்ளன. இதனை நாம் வரவேற்கிறோம்.

எனினும், இந்த மாற்றம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் இதுதொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் ஆலோசித்த பின்னர், அல் குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் உற்பட்ட வகையிலேயே  அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார். 

இதன்போது, இடையில் குறிக்கிட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் சம்பந்தமாக அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மற்றுமொரு குழுவும் இது சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் அறிக்கைகள் கிடைத்த பின்னர் நாங்கள் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னரே நாங்கள் அத்திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் - என்றார்.