Headlines
Loading...
வில்பத்து : மு.கா.வும் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தது

வில்பத்து : மு.கா.வும் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தது

வில்பத்து தொடர்பிலான  வர்த்தமானி அறிவித்தலின் மூலம்  அந்தப்பிரதேசத்து மக்களின் பூர்வீகப்பூமியை வனாந்திரப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான விபரங்களையும் மக்கள் வாழ்கின்ற குடியிருப்பு பிரதேசமானது அவர்களின் சொந்த நிலமாகும் என்கின்ற விடயத்தை தெளிவு படுத்தி அதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

1990 களில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் சுமார் 22 வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் இடம்பெயர்வானது மிகக்குறுகிய காலநேரத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். அந்த சந்தர்ப்பத்தில் தமது உயிர்களை  காப்பாற்றுகின்ற முனைப்புடன் இருந்தார்களே தவிர தமது உடமைகளை பற்றியோ அல்லது தமது காணி உறுதிகளை பற்றியோ சிந்திப்பதற்கான கால அவகாசம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இது தொடர்பில் சட்ட ரீதியான ஆவணங்களை தயார்படுத்தி சட்டப்படி இந்த மக்களின் காணிகளை பெற்றுக்கொடுக்கின்ற முயற்சியையே நாம் இப்போது எடுத்திருக்கிறோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி செயலாளர் குழுவுடனான சந்திப்பின்னரான ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வில்பத்து பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியின் பெருமளவு காணிகளை அரச காடுகளாக உள்வாங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. வில்பத்து மரிச்சிக்கட்டி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட பூரண அறிக்கையும், இது தொடர்பிலான முன்மொழிவுகளும்  எமது குழுவினரால் முன்வைக்கப்பட்டன. 

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உயர் மட்டக்குழுவுடன், சுற்றாடல் வனபரிபாலன திணைக்களத்தின் உயரதிகாரிகள் குழுவினை குறித்த பிரதேசத்திற்கு அழைத்துள்ளோம்  அந்தப்பிரதேசத்திலுள்ள உண்மைநிலையை அறிந்துகொள்ள இது உதவும். அத்தோடு பிழையாக பிரசுரிக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி, புதிய வர்த்தமானி என்பன மீளப்பெறவேண்டும் போன்ற கோரிக்கைகளை நாம் எழுத்து மூலம் கையளித்தோம்.
வர்த்தமானி அறிவித்தலில் மக்களின் மீள்குடியேற்ற பகுதி உள்ளடக்கப்படவில்லையென்றும், அவ்வாறு உள்ளடக்கப்பட்டிருப்பின் அவற்றை மக்களுக்கு மீளளிக்க முடியும் என்றும் அதிகாரிகள் மிகத்தெளிவாக உறுதிமொழி தந்தார்கள். என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்  

வணபரிபாலன திணைக்கள மேலதிகாரிகள்,சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்  ஆகிருடன் அமைச்சரின் சார்பில் பிரதியமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் சல்மான், வடமாகாணசபை உறுப்பினர் ரயீஸ்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் முயினுதீன், நியாஸ், முஜிபுர் ரஹ்மான்  ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்