Headlines
Loading...
பாதாள உலகினர் மூலம் என்னை கொல்ல முயற்சி : பேராசிரியர் நாஜிம்

பாதாள உலகினர் மூலம் என்னை கொல்ல முயற்சி : பேராசிரியர் நாஜிம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

கடந்த 2017-03-30 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின்   19வது வருடாந்த ஒன்றுகூடல், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர்கூடத்தில், 2016/2017 ஆம் வருடத்துக்கான ஊழியர் சங்க தலைவர், யாசீன்பாவா முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர் நாஜீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான் இங்கு நேர்மையாக உபவேந்தராக கடமையாற்றுவதற்கு பரிகாரமாகவும் களவுசெய்ய விடவில்லை என்பதற்காகவும்,  கொலன்னாவையில் உள்ள பாதாள உலக பயங்கரவாதிகளை பயன்படுத்தி  தன்னுடைய பிள்ளைகளை கடத்தப்போவதாகவும் எங்களை கொலை செய்யப் போவதாகவும் அச்சுறுத்தியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் பதவிவழியில் உபவேந்தர் பதவி என்பது நாட்டிலுள்ள ஏழாவது பிரஜை என்கின்ற அந்தஸ்த்தில் இருக்கின்ற போதிலும் தான் அவ்வாறான ஒரு அமைப்பில் செயப்படவில்லை என்றும் இன்றையதினம் ஊழியர்கள் கடமைலீவுடன் நிகழ்வில் பங்குகொண்டிருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வந்து என்னுடைய அறையை திறக்கவேண்டும் என்று தான் எதிர்பார்க்கவிக்கை என்றும் சிலர் தங்களது அறைகளையும் விரிவுரை மண்டபங்களையும் திறக்க ஆட்கள் வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் தன்னைப் பொறுத்தமட்டில் தான் தன்னுடைய அலுவலகத்தை திறந்து தன்னால் கடமையாற்றமுடியும் என்றும் தெரிவித்தார்.

வீட்டில் கழிவறைகளை சுத்தம் செய்வதிலிருந்து அவசர திருத்த வேலைகளையும் தானே செய்வதுண்டு என தெரிவித்த உபவேந்தர் நாஜீம், இங்கு தங்களுடைய பணிகள் வரையறுக்கப்பட்டது என சிலர் நினைத்துள்ளதாகவும் அதற்குமேல் எதனையும் செய்ய மாட்டேன் என தீர்மானித்துள்ளதாகவும் அது அவர்களது விருப்பம் என்றும் தெரிவித்த உபவேந்தர், தான் அவ்வாறு இருக்கப்போவதில்லை என்றும், இவர்கள் மறக்கக்கூடாது இது என்னுடைய பல்கலைக்கழகம் என்று, எங்களுடைய பல்கலைக்கழகம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றும் இந்த பல்கலைக்கழகம் இன்று இருப்பதைவிட நாளை இன்னும் சிறப்பாக இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உபவேந்தர் என்ற பணியை தான் மிகுந்த உளச்சுத்தியுடன் செய்து வருவதாகவும் அவ்வாறு தான் செயற்படும்போது சிலர் பாதிக்கப்படுவதாகவும் கடமை நேரத்தில் வெளியே செல்வது தொடர்பில் எடுத்த நடவடிக்கையால் தற்போது அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுவதாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைபொருத்தத்துடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் தான் மிகுந்த கரிசனையுடன் செயற்படுவதாக தெரிவித்த உபவேந்தர், தான் எடுத்த சில முன்னெடுப்புக்கள் ஊழியர் நலன்கள் சார்ந்ததாகவே இருந்ததாகவும் தெரிவித்தார். சிலர் சில இடங்களில் கூடிக்கொண்டு நாஜீம் என்கிற உபவேந்தருக்கு எதிராக பேசுவதில் கவலையில்லை என்று தெரிவித்த உபவேந்தர், இந்த பல்கலைக் கழகத்தைப்பற்றி பேசி அதற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மற்றைய பல்கலைக்கழகங்கள் போல் அல்லாது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தரை தேவைகருதி எப்போதும் சந்திக்கலாம் என்று தெரிவித்த பேராசிரியர், தன்னை சந்திப்பதற்கு அனுமதி எடுத்துக்கொண்டு வரத்தேவையில்லை என்றும், தான் அலுவலகத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எப்போதும் சந்திக்க முடியும். என்றும் அவரவரது வேலைகளை சுதந்திரமாக செய்யமுடியும் என்றும், அவைகளில் தான் தலையிடுவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஊழியர் சங்கத்துக்கு யார் தலைவராக இருக்கிறார் என்பது தனக்குப் பிரச்சினையில்லை என்று தெரிவித்த உபவேந்தர், தனக்கு எந்த குழுவும் இல்லை என்றும், யார் வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து அநாமோதய கடிதங்களுக்கு என ஒரு கோப்பை வைத்துள்ளதாகவும் அது நாளுக்குநாள் வளர்ந்துவருவதாகவும் இதில் தனக்கு எதிராகவும் தன்னை நேசிப்பவர்களுக்கு எதிராகவும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் கூடிய விடயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். கவலையான விடயம் என்னவென்றால் இவ்வாறான கடிதங்களை எழுதுபவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

என்னையும் ஊழியர்சங்க தலைவரையும் தீவிரவாதிகள் என்றுகூட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டார். அநாமோதய கடிதங்கள் எழுதியவர்களை, அவர்கள் இவ்வுலகில் தன்னிடம் வந்து மன்னிப்புக் கேட்காத பட்சத்தில் மறுமைநாளில் கூட மன்னிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இந்த பல்கலைக்கழகத்தையே உருவாக்கிய மர்ஹும் அஷ்ரப் அவர்களை விரட்டிய மக்கள் இருக்கும் பல்கலைக்கழகம் இது என்றும் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து மாறிவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

0 Comments: