கண்டி நகரை அண்மித்துள்ள கெட்டம்பே மஹா விஹாரை வளவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் ஒரு பகுதியை கொண்டு சென்று அதனை இரண்டாக உடைத்து வாகனத்தின் சில்லை மாற்ற தாங்கியாகப் பயன்படுத்திய இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த இரு இளைஞர்கள் உட்பட பன்னிரண்டு இளைஞர்கள் சிங்கள புத்தாண்டு தினத்தன்று புத்தளத்தில் இருந்து சுற்றுலா வந்துள்ளார்கள். இவர்கள் கெட்டம்பே விஹாரைக்கு அருகில் வரும்போது வந்த வாகனத்தின் ஒரு சில்லில் காற்றுப் போயிருக்கிறது. சில்லை மாற்ற வாகனத்தை நிறுத்திக் கொள்ள தாங்கியாக ஒரு கல் தேவைப்பட்டிருக்கிறது. அருகில் இருந்த கெட்டம்பே விஹாரை வளவில் இருந்த ஒரு சிலையை கல்லெனக் கருதி எடுத்துச் சென்று அது பெரிதாக இருந்ததால் இரண்டாக உடைத்து தாங்கியாக வைத்து சில்லை மாற்ற முயன்றிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தைக் கண்டு கோபமுற்ற கூடியிருந்த பௌத்தர்களும் பிக்குகளும் ஒன்று சேர்ந்து அந்த இடத்துக்குச் சென்று எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இது ஒரு பெரிய பிரச்சினையாக இனக் கலவரமாக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி கேள்விப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியர் பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மிகவும் சிரமப்பட்டு நிலைமையை சீராக்கியுள்ளார். சிலையைக் கொண்டு வந்து உடைந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.