முரண்களை தோற்றுவிக்கும் வகையில் பதுளையில் தூபம்

NEWS

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், பதுளையில் ஆங்காங்கே, பல்வேறான செயற்பாடுகள் விஷமிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
உரிமை கோரப்படாத நிலையில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள அதேவேளை, நினைவுப் படிகத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களை அழிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை - செங்கலடி பிரதான பாதை விஸ்தரிப்புக்காக நாட்டப்பட்ட நினைவுப் படிகத்தில் உள்ள தமிழ் மொழியையே அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதுளை சிறைச்சாலை மற்றும் இலங்கை வங்கிக் கிளை, நூலகம், வீல்ஸ் பார்க் மைதானம், நகரின் நுழைவாயில் ஆகியவற்றின் அருகாமையிலேயே, இந்நினைவுப் படிகம் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி நாட்டப்பட்டது.
அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஹரின் பெர்ணான்டோ, நிமல் சிறிபால டி சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ,இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரினால் இந்நினைவு கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, 'சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு' என்று சிங்கள மொழியில் மட்டுமே எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளுக்கு எந்தவோர் அமைப்போ அல்லது எவருமே உரிமை கோரவில்லை.
கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, சிங்கள மொழியில் மட்டுமே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை, நேற்று (23) காலை முதல் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான சுவரொட்டிகள் இரண்டை, பதுளை முதியங்கனை ரஜ மஹா விகாரையின் பின்னால் செல்லும் பிரதான பாதையோடு இருக்கின்ற மதிலில் காணக்கூடியதாக இருந்தது.
மேற்படி சிங்கள மொழியிலான சுவரொட்டிகளின் தமிழாக்கம் 'சிங்களவர்களின் பொறுமையை சோதிக்காதே' என்பதாகும்.
எம்.செல்வராஜா
6/grid1/Political
To Top