பொலிஸ் நிலையத்தை அகற்றக்கோரி வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதம்

TODAYCEYLON

வவுனியா நகரசபையின் வினைத்திறனான சேவையினை மேலும் மெருகுபடுத்துவதற்கு தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான காணியினை பெற்றுத்தருமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரனால் வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் முகாமைத்துவக்குழு கலந்துரையாடல், நகர அபிவிருத்தி அதிகாரசபை கலந்துரையாடல் என்பவற்றில் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணித்துண்டு நகரசபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆதனங்களாக விளங்குவதனால் இவற்றை பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலையிலுள்ளது.
எனவே இந்த காணித்துண்டினை வவுனியா நகரசபையின் அபிவிருத்திக்காக பெற்றுத்தருமாறு நகரசபை செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச சபை செயலாளர் க.உதயராசாவை தொடர்பு கொண்டு வினாவிய போது,
வவுனியா நகரசபை செயலாளர் அனுப்பி வைத்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியில் சிறிய துண்டு காணியே நகரசபைக்கு சொந்தமானது. அந்த காணியினை பொலிஸாருக்கே வழங்குமாறு நகரசபை செயலாளரிடம் வேண்டுகொள் விடுத்த சமயத்தில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அந்த காணித்துண்டை பொலிஸாரிடமிருந்து மீள பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என வவுனியா பிரதேச சபை செயலாளர் க.உதயராசா குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top