ஜெரூஸலத்தை பலஸ்தீன அரசினதும், இஸ்ரேலினதும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகராக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான கோரிக்கை மற்றும் நியமம் என்பவற்றுக்கு மாற்றமான முறையில் அமெரிக்க ஜனாதிபதி நடந்து கொண்டிருப்பதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது நிலைப்பாட்டிலேயே இலங்கை அரசாங்கமும் இருக்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனையின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பலஸ்தீன மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. பலஸ்தீனத்தினதும், ஜெருஸலத்தினதுமுடைய அராபிய வரலாற்று தடையங்களை மறுதலிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவை புராதன மக்கள் வாழ்ந்த பண்டைய நிலங்களாகும். ஜெரூஸலம் ஏகஇறைக் கொள்கையை விசுவாசித்த மூன்று சமய நெறிகளை பின்பற்றியோரின் நிலப்பரப்பாகும்.
அமெரிக்காவின் புதிய நிலைப்பாடானது இந்த சமய வேறுபாடுகளை உக்கிரமடையச் செய்வதேயல்லாது, பலஸ்தீன மக்களோடு சமரசத்தை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலை ஊக்குவிப்பதாக அமையாது, அமெரிக்காவின் முடிவு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறுவது மட்டுமல்லாது, பிராந்தியத்தின் சமாதானத்தை வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது.
ஆகையால், அமைதியைக் சீரழிக்கக்கூடிய சர்வதேச சட்டபூர்வ நியமங்களை மீறுகின்ற அமெரிக்காவின் தீர்மானத்தை மீளப்பெறுமாறு நாம் வேண்டிக்கொள்கின்றோம்.a