ரோகிங்யா அகதிகளை திரும்ப பெற மியான்மர் சம்மதம் - பங்காளதேசத்துடன் ஒப்பந்தம்

NEWS
கலவரத்தால் வங்காள தேசத்திற்கு குடிபெயர்ந்த 7 லட்சத்து 50 ஆயிரம் ரோகிங்யா அகதிகளை இரண்டு ஆண்டுகளில் திரும்ப பெறுவதாக மியான்மர் அரசு அறிவித்துள்ளது

மியான்மரில் வங்காள தேச எல்லையில் ரோகிங்யா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கலவரம் ஏற்பட்டது. அப்போது ரோகிங்யா இன முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலர் உயிரிழந்தனர்.

அதைதொடர்ந்து உயிருக்கு பயந்த அவர்கள் குடும்பம் குடும்பமாக வங்காள தேசத்துக்கு குடிபெயர்ந்து அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அவர்கள் மியான்மர் எல்லைப் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மியான்மர் ரோகிங்யா மாகாணத்தில் அமைதி திரும்பியுள்ளது.

எனவே, வங்காள தேசத்துக்கு அகதிகளாக சென்றவர்களை மீண்டும் மியான்மரில் குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து வங்காள தேசம் -மியான்மர் நாடுகளின் உயர்மட்ட அரசு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் தீர்வு எட்டப்பட்டு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அதன்படி இன்னும் 2 ஆண்டுகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரோகிங்யா அகதிகளை படிப்படியாக மீண்டும் குடியேற்றம் செய்ய மியான்மர் சம்மதித்தது.

இந்த நடவடிக்கை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. இவர்கள் தவிர ஏற்கனவே வங்காள தேசத்தில் அகதிகளாக இருக்கும் 2 லட்சம் ரோகிங்யா முஸ்லிம்களை ஏற்க முடியாது என்றும் மியான்மர் தெரிவித்துள்ளது.
6/grid1/Political
To Top