வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வே எமது இலக்கு - TNA

NEWS
"புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகவும் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வை காணவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்."

தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தியை மாத்திரம் நோக்காகக்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்று மத்திய அரசாங்த்தில் எத்தனையோ அமைச்சுப்பொறுப்புக்களை பெற்றிருந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இதனை தெரிவித்துள்ளார், அவர் மேலும் குறி்ப்பிட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்காக உள் நாட்டிலும், சர்வதேசத்தில் இருந்து செயற்படும் சில அமைப்புக்களும் முனைப்புடன் செயற்படுவதாக சாடினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகவரியை பெற்ற சிலர் தங்களது சுய நலனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது தமிழ் மக்கள் இருப்பதாக வலியுறுத்தினார்.

நிரந்தரமான வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறை ஆட்சி மூலம் தமது உரிமையை வென்றெடுக்க வேண்டும் அப்போதுதான் நிரந்தரமான நிறைபேறான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்
6/grid1/Political
To Top