-ஊடகப்பிரிவு-
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (இந்திய வீடுகள்) என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம் என்ற பெயர்களில் நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் முறையிட்டனர்.
மன்னார் வெள்ளாங்குளம் , தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சரை , சந்திக்க வந்த இந்த அயற்கிராம மக்கள் வாழ்க்கையில் தாம் பட்டுவரும் அவஸ்தைகளையும் அவலங்களையும் அமைச்சரிடம் வேதனையுடன் விபரித்தனர்.

" இந்திய வீடுகள் என்ற பெயரில் எமக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் ஜன்னல்கள் நொருங்கிக்கிடக்கின்றன. மழை காலங்களில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள்ளே நீர் வருகின்றது. அதுமட்டுமன்றி வீடுகளில் உறுதியான தளங்கள் போடப்படாததால் வீட்டுக்குள்ளே நீர் ஊற்று கிளம்புகிறது. இரவு நேரங்களில் மழை வந்தால் நாங்கள் படுத்த பாயை சுருட்டி வைத்து விட்டு நீரை வெளியே எத்த வேண்டிய நிலையே இருக்கின்றது.இந்த வீட்டின் நிலைமையை அமைச்சராகிய நீங்கள் வந்து பார்வையிட வேண்டுமென நாம் அன்பாய் வேண்டுகின்றோம் . எமது நிலைமைகளையும் நாம் அன்றாட வாழ்வில் எதிர் நோக்குகின்ற கஷ்டங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும்." என்று பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் "எத்தனை குடும்பங்கள் அங்கே வசிக்கின்றன எனக்கேட்ட போது அந்த கிராம மக்கள் "72 குடும்பங்கள்" என பதிலளித்தனர். "உங்களுக்கு வேறு என்ன தேவைகள் இருக்கின்றன" என அமைச்சர் வினவிய போது இந்த வீட்டை திருத்தி தரவேண்டும் அல்லது புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அந்த ஊர்மக்கள் , "எங்களது உண்மையான கஷ்டங்களை தெரிவிக்கின்ற போது , வீடு கட்டித்தந்தவர்களுக்கு இந்த முறைப்பாடு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை. வீடுகளை தந்த போது எங்களுக்கு ஆசை வார்த்தைகளையே கூறினர் , கொம்பியூட்டரில் அடித்துக்காட்டி "இப்படியான வீடுகளை விட்டு விடாதீர்கள் " என நம்பிக்கை தந்தனர். தளபாடங்கள் தருவோம், ஊரில் ஆஸ்பத்திரி ஒன்றை கட்டித்தருவோம் என்றெல்லாம் அந்த அதிகாரிகள் எமக்கு உறுதியளித்தபோதும் இதுவரையில் இந்த வீட்டை தவிர எதுவுமே கிடைக்கவில்லை. சில வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. என்றும் அவர்கள் வேதனைப்பட்டனர்.
எங்களுக்கென்று ஒரு தொழிலில்லை போக்குவரத்து வசதியும் இல்லை , ஆகக்குறைந்தது ஒரு பைசிக்கிளாவது இல்லை . இங்குள்ள கிராம மக்களில் பலர் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்". என்று சேவா லங்கா கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், அவசரமாக பஸ் சேவை ஒன்றை இந்த பிரதேசத்திற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இ.போ.ச . அதிகாரிகளுடன் உரையாடியதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டார். அத்துடன் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி உதவுவதாக உறுதியளித்தார்.