யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்திலுள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது சந்தேகநபரான குறித்த இளைஞன் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாவது, “தனது முகநூலிலுள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார் ” என குறிப்பிட்டுள்ளார்.தேசிய தௌஹீத் ஜமாத்- யாழ்.மாவட்டம் எனப் பெயரிடப்பட்ட கடிதமொன்று யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதில் இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது.
எதிர்வரும் புதன்கிழமை பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார் என குறிப்பிடப்பட்டு இளைஞர் ஒருவரின் ஒளிப்படமும் பதிவேற்றப்பட்டிருந்தது. (இப்படியான வார்த்தைகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில்லை)
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய தீவிர விசாரணைகளை அவர்கள் நடத்தினர்.அதனடிப்படையிலேயே குறித்த இளைஞனை பொலிஸார் தற்போது கைது செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.